சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் நேற்று முன்தினம் (20.02.2026) முதல் வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் தேதி வரை என  45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்கப்பட்டு வருகிறது. 

Advertisment

இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை -தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 05ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், முக்கிய வழித்தடங்களில் இரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நேற்று (21.02.2026)  தென்னக இரயில்வே,  சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திடம் கோரியுள்ளது.

Advertisment

இந்த அறிவிப்பினை தொடர்ந்து, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 20.02.2026 முதல் 05.04.2026 வரை இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பீச் ஸ்டேசன், கிண்டி, தாம்பரம் வழியாக 75 பேருந்துகளும், கிண்டி, தாம்பரம் வழியாக 43 பேருந்துகளும், தாம்பரம் - கூடுவாஞ்சேரி வழியாக 64 பேருந்துகளும், பீச் ஸ்டேசன், பார்க் ஸ்டேசன், எழும்பூர் வழியாக 121 பேருந்துகளும், நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் வழியாக 55 பேருந்துகளும், பரங்கிமலை (St.Thomas Mount) இரயில் நிலையம் வழியாக 20 பேருந்துகளும் வழக்கமாக இயக்கப்படுகிறது.

மேலும் கூடுதலாக இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 27 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள், எழும்பூர் இரயில் நிலையம் முதல் தலைமைச்செயலகம் வழியாக 8 பேருந்துகளும், நுங்கம்பாக்கம் வழியாக 5 பேருந்துகள், பரங்கிமலை இரயில் நிலையம் வழியாக 5 பேருந்துகள் என மொத்தம் 60 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment