chandrababu naidu alleged Tirupati laddus contain bathroom cleaning chemicals
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரு வெவ்வேறு ஆய்வகங்களில் கடந்த 2024 ஆண்டு ஜூலை 6 மற்றும் 12ஆம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் எனத் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ இயக்குநர் மாநில போலீசார் தலைமையில் விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டைரி நிறுவனர் ராஜசேகர், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போலோ பாபா டைரி நிறுவனம் மற்றும் ஸ்ரீகாளகஸ்தியைச் சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு டைரி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என 15 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த விவகாரத்தின் இறுதி குற்றப்பத்திரிக்கையானது நெல்லூர் முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த விவகாரத்தில் 250 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 65 லட்சம் கிலோ நெய் போன்ற போலி நெய் சப்ளை செய்யப்பட்டதாகவும், 2014-24 இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஒரு கொடியே 68 லட்சம் கிலோ நெய் கொண்டு 48 கோடியே 76 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், பயன்படுத்தப்பட்ட ஒரு கோடியே 68 லட்சம் கிலோ நெய்யில் 68 லட்சம் கிலோ நெய் போலி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள கலுகோட்லா கிராமத்தில் இன்று (06-02-26) நடைபெற்ற கிராமக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “முந்தைய ஒய்.எஸ்.ஆர் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில், குளியலறை சுத்தம் செய்யும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரசாயனங்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட கலப்பட நெய், ஐந்து ஆண்டுகளாக லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. முந்தைய அரசாங்கம், வெங்கடேஸ்வர் சுவாமியின் புனிதத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்துள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Follow Us