வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (28.11.2025) காலை 07.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போன்று சிவகங்கை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (27.11.2025) டித்வா புயலாக மாறியது. இதனையடுத்து தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பிறப்பித்துள்ளார். மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல கடலுக்கு வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Follow Us