தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகச் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (18.10.2025) காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று காலை 7 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில், இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.