நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக  இந்தியாவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் டெல்லியில் தங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) டெல்லியில் உள்ள நாடாளுமன்ற விடுதிகளில் தங்கியுள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதாவும் அங்கு தங்கியிருக்கிறார்.

Advertisment

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சுதா இன்று காலை நாடாளுமன்ற விடுதி அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அவரது கழுத்தில் இருந்த 4.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயற்சித்திருக்கிறார். இதனைத் தடுக்க எம்.பி. சுதா போராடியபோதிலும், அவரால் மர்ம நபரைத் தடுக்க முடியவில்லை. அதன் காரணமாக, அந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதில், எம்.பி. சுதாவுக்கு கழுத்தில் சிறிய காயம் ஏற்பட்டது.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து எம்.பி. சுதா, சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தங்கச் சங்கிலியைப் பறித்து தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எம்.பி. சுதா எழுதிய கடிதத்தில், “இன்று காலை 6:15 மணியளவில், மற்றொரு தமிழக எம்.பி.யான சல்மாவுடன் நடைபயிற்சி சென்றிருந்தேன். அப்போது, ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், எனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதனால், எனக்கு காயம் ஏற்பட்டதுடன், மிகுந்த அதிர்ச்சியும் ஏற்பட்டது,” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தச் சம்பவம் நடந்த இடம் ஒன்றும் சாதாரண இடமல்ல. இந்திய மக்களின் பிரதிநிதிகளான எம்.பி.க்களின் விடுதிகள் அமைந்துள்ள இப்பகுதியில் உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அருகில் போலந்து நாட்டின் துணைத் தூதரகமும் அமைந்துள்ளது. இப்படி அதீத பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து, காங்கிரஸ் எம்.பி.யிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.