ரஷ்யாவுடன் ஒப்பந்தும் செய்துள்ளதால் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக நேற்று முன்தினம் (30-07-25) மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தத்தின் டிரம்ப் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். ஆனால், பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட அதற்கு பதிலளிக்கவில்லை. உலக தலைவர்கள் யாரும் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தவில்லை என மக்களவையில் பிரதமர் மோடி ஆணித்தரமாக பேசிய அடுத்த நாளே, தனது வேண்டுகோளின் பேரில் இந்தியா பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என டிரம்ப் 30வது முறை பேசி மீண்டும் பரப்பரப்பை கிளப்பினார். மேலும், இரு நாடுகளும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையே, இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து தனது தளமான ட்ரூத் சோசியலில், ‘இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. இரு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது. இரு நாடுகளும் தங்களின் இறந்த பொருளாதாராத்தை ஒன்றாக கொண்டு வர முடியும். நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வணிகத்தைச் செய்துள்ளோம். அவற்றின் கட்டணங்கள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. அதே போல், ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து எந்த வணிகத்தையும் செய்யவில்லை. அதை அப்படியே வைத்திருப்போம்’ என்று தெரிவித்திருந்தார். இந்தியாவின் பொருளாதாரம் இறந்துபோய்விட்டதாக டிரம்ப் விமர்சித்து பேசியிருந்தது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இத்தகைய களேபரம் நடந்து வரும் நிலையில் டிரம்ப் விதித்த அபராதத்துடன் கூடிய வரி விதிப்பு குறித்தோ, இந்தியாவை கடுமையாக விமர்சிப்பது குறித்தோ பிரதமர் நரேந்திர மோடி எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

அதே சமயம், பாகிஸ்தானில் உள்ள பெருமளவிலான எண்ணெய் வளத்தை மேம்படுத்த அமெரிக்க உடன்பாடு செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “யாருக்குத் தெரியும்..? ஒரு நாள் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எண்ணெய் விற்கும் நிலை ஏற்படலாம்” என்று கூறினார். பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியாவை தொடர்ந்து விமர்சிக்கும் விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.  

இந்த நிலையில், டிரம்ப் விதித்த 25% வரி விதிப்பு நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எந்த நாட்டுடனும் அவற்றின் தகுதியைப் பொறுத்து நமது உறவுகள் இருக்கின்றன. மூன்றாவது நாட்டின் பார்வையில் இருந்து பார்க்கக்கூடாது. இந்தியா - ரஷ்யா உறவை பொறுத்தவரை, நமக்கு நிலையான மற்றும் காலத்தால் சோதிக்கப்பட்ட கூட்டாண்மை உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்யலாம் என்று டிரம்ப் கூறியது குறித்து, எனக்கு எந்தக் கருத்தும் இல்லை” என்று கூறினார்.