டெல்லியில் 45வது காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நேற்று (06.11.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், காவிரி தொழில் நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவின் தலைவர் இரா.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு உறுப்பினர் தற்பொழுது (05.11.2025) மேட்டூர் அணையின் நீர் இருப்பு 89.741 டி.எம்.சி ஆக உள்ளது எனவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,401 கன அடியாக உள்ளது என்றும் அணையிலிருந்து வினாடிக்கு 18,427 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு 2025, நவம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 13.78 டி.எம்.சி. நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து உயர்ந்து வருவதால், தமிழகத்திற்கு நவம்பர் மாதத்திற்கு 13.78 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டிய நீர் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow Us