தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு : “கால அவகாசம் வழங்க வேண்டும்” - தமிழக அரசு வாதம்!

gcc-sanitation-worker-pro

பெருநகர சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கு. பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களிலும் பணியாற்றும் 242 நிரந்தரப் பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள்.1953 தற்காலிகப் பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியமர்த்தப்படுவார்கள் என மாநகராட்ட்சி சார்பில்  கூறினாலும், தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் அமர்வில் இன்று (11.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “இந்த வழக்கு தொடர்பான பதில் மனு தயாராக உள்ளது. எனவே பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில்,  “தூய்மைப் பணியாளர்கள் 2000 பேர் தெருக்களில் போராடி வருகிறார்கள். ஆனால் குப்பையை போல் அவர்கள் வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது. அதற்கு தலைமை வழக்கறிஞர், “தூயமைப் பணியாளர்கள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி நாளை மறுநாள் (13.08.2025) ஒத்தி வைத்தார். இதற்கிடையே தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அமர்வில் வழக்கறிஞர் வினோத் என்பவர் அவசர முறையீடு செய்தார்.

அப்போது அரசு தரப்பில், “சேப்பாக்கம், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தூய்மைப் பணியாளர்கள் வேண்டுமென்றே ரிப்பன் கட்டடம் அருகில் போராட்டம் நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இந்த வழக்கின் விசாரணையை நாளை (12.08.2025) எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

chennai corporation high court sanitary workers tn govt
இதையும் படியுங்கள்
Subscribe