செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு அரசு வேலை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனக்கு ஏற்கனவே அறிமுகமான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வந்த கலாநிதி என்பவரிடம் இரண்டரை கோடி ரூபாய் பணத்தை நேரடியாக கொடுத்துள்ளார். ஆனால் கலாநிதி, தனசேகரிடம் கூறியப்படி வேலை வாங்கி தராமல் பல ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
அதோடு தனசேகரின் நிலத்தின் பத்திரத்தையும் கலாநிதி பெற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு சில அந்த நிலப்பத்திரம் காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தனசேகர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து சென்னை சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்,“அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கலாநிதி சுமார் 2.5 கோடி ரூபாய் பணம் மோசடி செய்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் சென்னை மயிலாப்பூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் கலாநிதி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us