மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கடந்த 21ஆம் தேதி (21.08.2025) நடைபெற்றது இந்த மாநாட்டில் சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் தனியார் பவுன்சர்கள் புடைசூழ ராம்ப் வாக் செய்தார். அச்சமயத்தில் விஜய்யை நோக்கி ஓடிவந்த பல தொண்டர்கள் பவுன்சர்களால் தடுக்கப்பட்டனர். அப்போது இளைஞர் ஒருவரை பவுன்சர் ஒருவர் தூக்கி கீழே எறிந்த நிலையில் அந்த இளைஞர் தலைகீழாக விழுந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இத்தகைய சூழலில் தான் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் அவரது தாய் புகார் அளித்தனர். அதில் தன்னை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாகவும், தனக்கு காயம் ஏற்பட்டதாகவும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் அவருடைய பவுன்சர்கள் உள்ளிட்டோர் மீது குன்னம் காவல் நிலையத்தில் தகாத வார்த்தைகள் பேசுவது, அத்துமீறுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற பகுதி மதுரை மாவட்டம் பாரபத்தி என்பதால், இந்த வழக்கு கூடக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது ஆகும். இதனால் குன்னம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். அதன்படி இந்த வழக்கு தொடர்பாக கூடக்கோவில் காவல் நிலையத்தினர் பி.என்.எஸ். சட்டம் 96 பி 115 கீழ் இ2 மற்றும் 189 கீழ் 2 என 3 பிரிவுகளில் த.வெ.க. விஜய் மீதும், 10 பவுன்சர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.