ஆவடியில் அதிவேகமாக சென்ற கார் மோதி ஏற்படுத்திய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி
திருவேற்காடு, பள்ளிக்குப்பம், ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் அறிவரசன், 41 ; தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி சரண்யா, 36 ; திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரட்டை மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், அறிவரசன், சரண்யாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டும் ஆவடி - பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆவடி வசந்தம் நகர் அருகே சென்ற போது, பின்னால் வந்த வேகமாக வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் மைய தடுப்பு சுவரில் மோதி தலை குப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அறிவரசன், சரண்யா இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காரை ஒட்டி பலத்த காயமடைந்த அரசு மருத்துவர் பாரி மார்க்ஸ் என்பவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் கணவன், மனைவி இறந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.