வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகேயுள்ள அப்புக்கல் கிராமம், மானிகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 55). இவர் தனக்குச் சொந்தமாக பத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியை இழுத்துச் சென்றதாகவும், இதில் கன்றுக்குட்டி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு அணைக்கட்டு காவல்துறையினர் மற்றும் வேலூர் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கால்தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுத்தையின் தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் கன்றுக்குட்டியின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.