தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், 21வது அமைச்சரவைக் கூட்டம் இன்று (14.08.2025) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “பல சிறப்பு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைக்கு வழங்கி அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். தூய்மை பணியாளர்களுடைய நலவாழ்வில் முதலமைச்சர்களுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியான திமுக அரசு எந்த அளவிற்குப் பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள். கடந்த 2007ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் தான் தூய்மை பணியாளர் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
அந்த நலவாரியத்திற்கான உரிய நிதி நல்கையிலும் அரசு முறையான வகையிலே வழங்கி நலவாரியம் சிறப்பாகச் செயல்படவும் நலவாரியத்தினுடைய திட்டங்கள், நன்மைகள், வழங்கக்கூடிய நலன்கள் தூய்மை பணியாளருக்கும், அவர்தாம் குடும்பத்திற்கும் தருவதை அரசு உறுதி செய்து வந்திருக்கிறது. எனவே முதலமைச்சர் , கலைஞருடைய காலத்திலிருந்து தொடர்ந்திருக்கக்கூடிய இந்த பாரம்பரியத்தை அவர்களும் கடைப்பிடித்து தூய்மை பணியாளர் மீது அவருக்கும் தனி கரிசனத்தோடு இருக்கிறார் தூய்மை பணியாளர்கள் குப்பைகளைக் கையாளும் போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இத்தகைய தொழில்சார் நோய்களைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
தூய்மை பணியாளர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்களுக்குத் தூய்மை பணியாளர் நலவாரியத்தின் மூலமாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்களுடைய குடும்பங்களினுடைய எதிர்கால நலனையும் வாழ்வாதாரத்தையும் முழுமையாக உறுதி செய்யச் செய்யக்கூடிய வகையில் இந்த நிதி உதவியுடன் கூடுதலாக இந்த பணியாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் அளவிற்குக் காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால் பணியின் போது இறக்க நேரிடும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் கிடைத்திட வழிவகை ஏற்படும். தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினுடைய சமூக, பொருளாதார நிலையினை உயர்த்திட சுய தொழில் தொடங்கும்போது அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும்.
மேலும் இந்த கடன் உதவி அதைப் பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையைத் தவறாமல் திருப்பிச் செலுத்துவதற்கு ஆறு விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மை பணியாளருடைய குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும் அவர்களுக்கு உயர்கல்வி கட்டணச் செலவை மட்டுமின்றி விடுதி கட்டணம் புத்தக கட்டணங்களுக்கான உதவித் தொகையை வழங்கிடும் வகையில் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில் தூய்மை பணியாளர் நல வாரியத்தினுடைய உதவியோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30 ஆயிரம் குடியிருப்புக்கள் கட்டித்தரப்படும்.
கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும். தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் காலை உணவு சமைப்பதற்கும் அதை பணிபுரிய இடத்திற்குக் கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்குக் காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாகப் பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆக இந்த ஆறு முக்கியமான அறிவிப்புகள் தூய்மை பணியாளருடைய நலனுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.