புதுக்கோட்டைப் பேருந்து நிலையம் சேதமடைந்து உடைந்து கொட்டி பலரைக் காயப்படுத்திய நிலையில் அதனை அகற்றி புதிய பேருந்து நிலையம் கட்ட சுமார் ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்த பிறகு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க இடம் தேடுவதிலேயே பல மாதங்கள் பணிகள் தொடங்காமல் கிடந்து தற்போது பணிகள் நடந்து வருகின்றன.
முன்னதாக இந்த பணிகள் தொடங்கும் முன்பு பேருந்து நிலையம் அருகிலேயே அரசுப் போக்குவரத்துக் கழகம் அமைந்துள்ள காலியிடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் சரியான சீரமைப்புப் பணிகள் செய்யாமல் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே மழைத் தண்ணீர் அதிகம் தேங்கும் பகுதி என்ற போதிலும் அதனைச் சரி செய்யவில்லை.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்தாலே தற்காலிக பேருந்து நிலையத்தில் குளம் போலத் தண்ணீர் தேங்கிச் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இங்குப் பேருந்து ஏற வரும் பயணிகள் சேற்றுக்குள் இறங்கிச் செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இதனை ஏனோ எந்த நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பயணிகளும் பேருந்து ஓட்டுநர்களும் ரொம்பவே அவதிப்பட்டு வருகின்றனர்.