brutal act by police officer and youtuber to 14-year-old girl
உத்திரப்பிரதேசம் மாநிலம், கான்பூரில் கடந்த 5ஆம் தேதி இரவு 10 மணியளவில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடத்தப்பட்ட சிறுமி ஒரு ரயில் பாதைக்கு அருகிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில், காவல் உதவி ஆய்வாளர் அமித் குமார் மெளரியா மற்றும் யூடியூபர் சிவபரன் யாதவ் ஆகியோரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், மயக்கமடைந்த நிலையில் அவரது வீட்டின் வெளியே விடப்பட்டுள்ளார்.
இதனைக் கண்டு அதியர்ச்சியடைந்த குடும்பத்தினர், நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், சம்பவத்தில் ஒரு காவல் துணை ஆய்வாளரும் சம்பந்தப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் கூறியதையடுத்து, காவலர்கள் புகாரை வாங்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிறகு குடும்பத்தாரின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காவல்துறையினர் புகாரை பெற்றுக்கொண்டனர். இருந்த போதிலும், காவல்துறையினர் இந்த சம்பவத்திற்கு போக்சோ வழக்கை பதிவு செய்யாமல், நடந்த சம்பவத்தை மறைத்து உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வழக்கில் பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கை மூடிமறைப்பதற்கான வேலைகளையும் காவல்துறையினர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கான்பூர் காவல்துறை ஆணையர் ரகுபீர் லால், ‘இந்த வழக்கில் முறையான விசாரணை மேற்கொள்ளாத காரணத்தினால், துணை ஆணையர் தினேஷ் சந்திர திரிபாதியை நீக்கியதுடன், சச்செண்டி காவல் நிலைய ஆய்வாளர் விக்ரம் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் அமித் குமார் மௌரியா மற்றும் யூடியூபர் சிவபரன் யாதவ் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார், தலைமறைவாக உள்ள மௌரியாவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷினி அலி, உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இந்த குற்றங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்யக்கோரி காவல்துறை ஆணையரைச் சந்தித்துப் பேசினார்.
Follow Us