பஞ்சாப் மாநிலம் டர்ண்டரன் மாவட்டத்திலுள்ள பட்டி என்ற இடத்தில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது மணமகள் மீது பணத்தாள்கள் கொட்டப்பட்டது. மணமகளைச் சுற்றியும் பணத்தாள்கள் குவிந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

Advertisment

அதே நேரத்தில், மணமகள் மீது மழையாகக் கொட்டப்பட்ட அந்த பணத்தின் மதிப்பு சுமார் 8.5 கோடிகள் இருக்கும்  என்றும் சொல்லப்பட்டது. அதனால் இந்த வீடியோ வைரலாகி, அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில், மணமகன் ஆஸ்திரேலியாவில் லாரி தொழில் நடத்திவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பஞ்சாபில் கலாச்சாரப்படி திருமணத்தின் போது மணமகள் மீது பணத்தாள்களை வீசி வாழ்த்துவது வழக்கம் தான் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இது குறித்துப் பேசிய மணமகனின் சகோதரர் சிக்கந்தர் சிங், "திருமணத்தின் போது மணமகள் மீது பணம் கொட்டப்படுவது வழக்கம் தான். மணமகளை வாழ்த்தவும், தீய சக்திகள் தங்களை அணுகாமல் இருக்கவும் இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது. அந்த பணத்தின் மதிப்பு ரூ. 2 லட்சம் தான். ஆனால், இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று வதந்திகளைப் பரப்பியுள்ளார்கள். இது தவறான தகவல்" என்று தெரிவித்துள்ளார். மேலும், திருமண விழாவை நடத்திய மேலாளரும், "இந்த பணத்தின் மதிப்பு கோடிகளில் கூறப்படுவதில் உண்மை இல்லை" என்று மறுத்துள்ளார்.