திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, 35, பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு (42)  என்பவர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ள வைரபெருமாள்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது தாயார் கடந்த 07.12.2025 அன்று இறந்துவிட்டார். இது தொடர்பாக கந்தசாமி வாரிசு சான்று கேட்டு இணையத்தில் தகுந்த ஆவணங்களுடன் 24.12.2025 அன்று விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக 31.12.2025 அன்று பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு VAO பிரபுவை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது வாரிசு சான்று வழங்க பரிந்துரை செய்ய ரூ.6000/- கேட்டு, பின்னர், கந்தசாமி கேட்டு கொண்டதன் பேரில் ரூ.1000/-ம் குறைத்து ரூ.5000/- த்தை லஞ்சமாக கேட்டுள்ளார். 

Advertisment

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத புகார்தாரர் கந்தசாமி 02.01.2026 ஆம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 05.01.2026 ஆம் தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் பாலமுருகன் மற்றும் குழுவினர்களுடன் இரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.5000/-ஐ புகார்தாரரிடம் கொடுத்தனுப்பி, மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, 35, பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில், VAO பிரபு, இரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.5,000/-ஐ கந்தசாமி என்பவரிடமிருந்து, VAO பிரபு கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். வி.ஏ.ஓ. பிரபு துறையூர் ராமலிங்க நகரில் வசித்து வருகிறார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment