இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கடன் வாங்கி வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் தான் உள்ளனர். சிலர் தங்களின் ஆடம்பரத்தை வெளிப்படுத்தவும் கடன் வாங்கி சில தேவையில்லாத செலவுகளையும் செய்து வருகின்றனர். எது எப்படி இருப்பினும், அந்த கடன்களை முறையாக திருப்பி செலுத்திவிட்டால் பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஒருவேளை அவ்வாறு செலுத்தாவிட்டால், அது விபரீதத்தில் போய் முடிந்துவிடுகிறது.

Advertisment

கடன் வழங்கிய நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களை மனதளவில் துன்புறுத்துகின்றன. குறிப்பாக, கடனை திரும்பப் பெறுவதற்கு ஒரு ஏஜென்ட் வைத்து, அவர்களின் மூலமாகக் கடனை வசூல் செய்யும் முயற்சியில் இறங்கி விடுகிறார்கள். அவர்கள், கடன் பெற்றவர்களை மனதளவில் துன்புறுத்துதல், பொது இடத்தில் அவதூறாகப் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாகப் பலர் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. 

Advertisment

இது குறித்து ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளன. இதனால், கடனை வசூல் செய்யும் ஏஜென்ட் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதன்படி, " காலை 8 மணிக்குள்ளாகவும், மாலை 7 மணிக்கு பிறகும் கடனை வசூல் செய்யும் விதமாக வாடிக்கையாளர்களுக்குக் கால் செய்யக்கூடாது. கடன் பெற்றவரைத் தவிர, வீட்டில் உள்ள பிற நபர்களைத் தொடர்பு கொள்ளக் கூடாது. வாடிக்கையாளர் சொல்லும் இடத்தில் தான் அவரை சந்திக்க வேண்டும். வாடிக்கையாளர்களை மிரட்டவோ அல்லது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.