BNP takes power General elections in Bangladesh
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆண்டு ஜூலை மாதத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக, ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையின் கீழ் இடைக்கால ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், நாட்டில் உள்ள மொத்தம் 300 இடங்களில், 299 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு வேட்பாளர் மறைவின் காரணமாக ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த தேர்தலில், ஷேக் ஹசீனாவின் மீது வழக்கு உள்ளதால் அவாமி லீக் கட்சி போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டது. அதன் காரணமாக, வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த தேர்தலில், 50 கட்சிகளைச் சேர்ந்த 1755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை 7.30 வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மலை 4.30 மணியளவில் நிறைவு பெற்றது. மொத்தம் உள்ள 42,779 வாக்குச்சாவடிகளும் பலத்த பாதுகாப்புடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 8 லட்சம் பணியாளர்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பரபரப்பான தேர்தலில், 155 இடங்களை வென்று பிஎன்பி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி 41 இடங்கை கைப்பற்றியுள்ளன. இஸ்லாமிய அந்தோலன் பங்களாதேஷ் ஒரு இடத்தில் வென்றுள்ளது. மற்றவர்கள் பிற ஐந்து இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிஎன்பி கட்சி மற்றும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மான் அவர்களுக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us