தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

Advertisment

அதன்படி, மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, எஸ்.ஐ.ஆர் பணியில் அதிக பணிச்சுமை இருப்பதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், சர்வர் வேகமாக செயல்படவில்லை எனவும் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதிகாரிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிக்காக தேர்தல் ஆணையத்தால் பணியமர்த்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) பணிச்சுமை காரணமாக தொடர்ச்சியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி நிலைய அலுவலர் சுக்தேப் தாஸ் என்பவர், நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், “வேலை அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, சில சமயங்களில் தலைச்சுற்றல் கூட ஏற்பட்டது. வாக்காளர்களிடமிருந்து கணக்கெடுப்பு படிவங்களை சேகரிப்பது நீண்ட நேரம் எடுக்கும், அதன் பிறகு நாங்கள் தரவை ஆன்லைனில் வழங்க வேண்டும். யாராவது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்ய முடியுமா?” என்று வேதனையோடு கூறினார்.

Advertisment

அதே போல், சோனார்பூரில் உள்ள வாக்குச்சாவடியின் பி.எல்.ஓ தனுஸ்ரீ ஹல்தார் நய்யா மற்றும் ஜாய்நகரில் உள்ள வாக்குச்சாவடியின் பி.எல்.ஓ கமல் நாஸ்கர் ஆகியோர் எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை காரணமாக நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூரைச் சேர்ந்த பி.எல்.ஓ. முஸ்தபா கமல், நேற்று முன் தினம் இஸ்லாம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், “ஆன்லைன் தரவை பதிவேற்றுவதற்கு எங்களுக்கு வழங்கப்பட்ட இலக்கு சாத்தியமற்றது. நான் இப்போது மருத்துவமனையில் இருந்து அதைச் செய்கிறேன்” என்று உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னதாக, எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை காரணமாக நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகர் சோப்ரா பங்கல்ஜி பகுதியைச் சேர்ந்த 53 வயதான ரிங்கு டரஃப்தார் என்ற பி.எல்.ஓ அதிகாரி, தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.