BJP to field first woman DGP in Kerala Assembly elections
கேரளத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த முக்கிய மூன்று கட்சிகள் உட்படப் பிற கட்சிகளும் தொடர்ந்து தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளத்தின் முன்னாள் டிஜிபி யும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
கேரளத்தின் முதல் பெண் டிஜிபியாக பணியாற்றியவர் ஸ்ரீலேகா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்தபோது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, இவர் பாஜகவில் இணைந்தார். இவர், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக, திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றினால் இவருக்கு மேயர் பதவி கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், சொன்னது போல் இவருக்குப் பதவி கொடுக்கப்படவில்லை. இதனால், இவர் அதிருப்திக்குள்ளனார். இதன் காரணமாகக் கட்சி பணிகளில் இருந்து இவர் சற்று விலகியே இருந்து வந்தார். இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்பளிக்க பாஜக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வட்டியூர்க்காவு தொகுதியில் இவர் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்த தொகுதி பாஜக செல்வாக்கு மிக்க தொகுதி என்று கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட இருப்பதையடுத்து, இவர் அந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us