மாவட்ட ஆட்சியர் ஒருவரை, பா.ஜ.க எம்.எல்.ஏ அடிக்க பாய்ந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு, இரண்டு மூட்டை உரங்களை மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விவசாயி, பிந்த் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ நரேந்திர சிங் குஷ்வாஹாவிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. இதை கேட்டு கோபமடைந்த நரேந்திர சிங், விவசாயிகள் மற்றும் ஆதரவாளர்கள் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தாவாவின் பங்களாவிற்குச் சென்றார். ஆனால் ஆட்சியர் சஞ்சீவ், அவரை சந்திக்க வெளியே வரவில்லை.

இதில் கோபமடைந்த நரேந்திர சிங், தனது ஆதரவாளர்களுடன் உள்ளே வலுக்கட்டாயமாக நுழைந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் வெளியே வந்தார். அதன் பின்னர் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது எம்.எல்.ஏ நரேந்திர சிங், மாவட்ட ஆட்சியர் சஞ்சீவை அறைய கையை உயர்த்தினார். மேலும் அவர், ‘பிந்த் கலெக்டர் ஒரு திருடன்’ எனக் கூச்சலிட்டார். இதனால் அந்த இடமே பரபரப்பானது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரை நீகக் வேண்டும் என்று விவசாயிகள் பங்களா முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கலெக்டர் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை இந்த இடத்தை வெளியேற மாட்டேன் என்று எம்.எல்.ஏ நரேந்திர சிங் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மூத்த காவல்துறை அதிகார்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு, அங்கிருந்து கலைவதாக நரேந்திர சிங் உள்பட விவசாயிகள் தெரிவித்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இது குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ நரேந்திர சிங் கூறுகையில், ‘ஒவ்வொரு துறையும் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. விவசாயிகள் அத்தியாவசியப் பொருட்களை இழந்து வருகின்றனர். ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்காக கலெக்டரை நீக்க வேண்டும்’ என்று கூறினார்.