புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கீரமங்கலத்தில் நடந்த 'தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ''இருமொழிக் கொள்கை இருக்கும் வரை அண்ணாவி்ன் ஆட்சிதான் நடக்கும். பிரதமர் நாடாளுமன்ற அவைக்கு வருவதில்லை, நாடாளுமன்றம் கூடுவதாக சொன்னால் வெளிநாடு சுற்றுப்பயணம் கிளம்பிவிடுவார். ஆனால் அண்ணா புற்றுநோய் பாதிப்பிலும் கஞ்சியை கரைத்து குடித்துவிட்டு அவைக்குச் சென்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வார்.

Advertisment

பெரியாரின் சுயமரியாதை தீர்மானத்திற்கு சட்டம் கொண்டு வந்தார் அண்ணா. 1969 பிப்ரவரி 9 இந்த நாளில் தான் தலைவர் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற நாள். 30 ஆண்டுகள் பதவியில் உள்ள மோடியின் குஜராத்தில் கல்வி இல்லை. கல்விக்கூடங்கள் இல்லை. 15 ஆண்டுகள் முதல்வர் இப்போது பிரதமர். சொந்த மாநில மக்களுக்கு கல்வி கொடுக்க கூடாது என்று உள்ளவர் தான் பிரதமர் மோடி. இந்தியாவில் உள்ள அந்தமானில் குழந்தைகள் படித்தாலும் இடஒதுக்கீடு கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு தான் நம் குழந்தைகளை உயர வைத்துள்ளது.

Advertisment

தப்பித்தவறி கூட பாஜக கூட்டணி கால் ஊன்றினால் நம் உரிமைகள் எல்லாம் பறிபோகும். நலிவுற்ற மக்களை முடக்கி உயர் ஜாதிக்காக கொண்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் முதல்வர். இந்த ஆட்சி தமிழர்களின் அடையாளம். நெடுவாசல் திட்டத்தை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. ஆனால் திமுக தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திமுக ஆட்சியில் திட்டம் முடக்கப்படும் என்றார். செய்தார். தமிழக இயற்கை வளங்களை அழிக்க பாஜக துடிக்கிறது அதற்கு அடிமை அதிமுக துணை போகிறது. ஆனால் ஒரு பிடி மண்ணைக்கூட தொடவிடாமல் விரட்டி அடிப்பார் மு.க.ஸ்டாலின்.

இதற்கு முன் திமுக - அதிமுக தான் ஆட்சிக்கு வரும் ஆனால் இனிமேல் பாசிச பாஜக வர துடிக்கிறது. அவர்கள் வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. இனத்தை அழிக்க மொழியை அழிக்க வரும் பாஜக வேண்டாம். பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட தராத பாஜக கூட்டத்தை விரட்டி அடிப்போம்'' என்றார்.

Advertisment