Advertisment

கலைஞர் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா; உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!

sc

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்” அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி (24.04.2025) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை ஏற்றுத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கும் கலைஞருக்கு விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்” என அறிவித்தார். 

Advertisment

அதன் பின்னர் இது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இத்தகைய சூழலில் தான் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவைத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதாவது துணைவேந்தர் நியமனம், யூஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளைக் காரணம் காட்டி மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

Advertisment

அதில், “ கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீதான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் 3 மாதங்களாக எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பிறகு யூஜிசி விதிகள், அது தொடர்பான வழக்குகளைக் காரணம் காட்டி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளது ஏற்புடையது அல்ல.

ஆளுநர் மசோதாக்கள் மீதான விவகாரத்தில் ஒப்புதல் அளிப்பதில் செயல்பாடற்ற முறையில் உள்ளார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் தொடர்ந்து மாநில மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் குறிப்பாக மாணவர்களின் படிப்பிற்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு இருந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

kalaignar University
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe