பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது.

Advertisment

தொடர்ந்து முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. பெரும்பாலான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 62 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில் 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 42  தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 14 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. லோக் ஜனசக்தி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. போட்டியிட்ட 61 தொகுதிகளில் கிஷன்கஞ்ச் என்ற 1 தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த தேஜஸ்வி, தான் போட்டியிட்ட ரகோபபூர் தொகுதியில் 1,18,597 வாக்குகள் பெற்று 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.