பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது. அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸ் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்க்ப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி காலை 12.15 மணியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களிலும், இந்தியா கூட்டணி 49 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. முதன் முதலாக தேர்தலைச் சந்தித்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடங்களில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/14/nithish-modi-2025-11-14-12-27-20.jpg)
அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 29 தொகுதிகளில் போட்டியிட்ட சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி 22 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் மகாகத்பந்தன் கூட்டணியில் (இந்தியா கூட்டணி) இடம் பெற்றிருந்த விகாஷீல் இன்சான் கட்சி ஓரிடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.ஜெ.டி. கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதாவது 3வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சதீஷ் குமார் ஆயிரத்து 273 வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜக சார்பில் அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட 25 வயதே ஆன நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இவர் ஆர்.ஜெ.டி. வேட்பாளர் பினோத் மிஸ்ராவை விட 4 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். தாராபூர் தொகுதியில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி முன்னிலை வகித்து வருகிறார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் பாட்னாவில் ஜே.டி.(யு) உள்ள கட்சியின் அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
Follow Us