Bears on the road - drivers are scared Photograph: (erode)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா கர்நாடகாவில் இருந்தும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலை வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது திடீரென வனப்பகுதி விட்டு வெளியேறிய கரடி ஒன்று தேசிய நெடுஞ்சாலையை கடந்து சாலையோரம் சுற்றிக் கொண்டிருந்தது.
திடீரென கரடி நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சாலையோரம் சுற்றிக் கொண்டிருந்த கரடியை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. கரடி நடமாட்டத்தால் வாகன ஒட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Follow Us