உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஆஸ்தா சிங் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளன்று, ஆஸ்தா வழக்கம் போல் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திடீரென வாடிக்கையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கடுமையான வார்த்தைகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரத்தின் உச்சத்திலிருந்த ஆஸ்தா, அந்த வாடிக்கையாளரிடம், ‘நான் ஒரு தாக்கூர்’ என்றும் ‘என்னிடம் பிரச்சனை செய்யாதே’ என்றும் அச்சுறுத்தும் விதமாகப் பேசியுள்ளார்.

Advertisment

இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வங்கி ஊழியர்கள் ஆஸ்தாவை சமாதானப்படுத்த முயன்றனர். இருந்த போதிலும் அவர் யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை. அப்போது, கோபத்தில் அருகிலிருந்த லேப்டாப்பை தூக்கியெறிய முயற்சிக்கும் காட்சிகளும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.  இருப்பினும், இதுவரை வங்கி நிர்வாகம் இது குறித்து எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

Advertisment

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண், இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இந்த வீடியோ ஜனவரி 6 அன்று எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் எனக்கும், உடன் பணியாற்றும் ஒரு பெண்ணிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தது. அப்போது, எனக்கும் அந்த பெண்ணின் கணவருக்கும் இடையே நடந்த பிரச்சனையில் அவர் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர், உன் திமிரை அடக்குவேன் என்று கூறினார். அதனால் தான் அவரிடம் கோபமாக நடந்துகொண்டேன். அந்த வீடியோ தற்போது வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டுப் பரப்பப்படுகிறது. இருப்பினும், அதில் நான் சொன்ன விஷயங்கள் உண்மை தான். நான் தாக்கூர் தான். அது எனக்குப் பெருமை தான்’ என்று தெரிவித்திருந்தார். மீண்டும் ஆஸ்தா வீடியோவில் சாதியைக் குறித்துப் பேசிய சம்பவம் வைரலாகி வருகிறது. இதற்கும் பலர் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.