Ban on sale of meat and fish for navatri
11 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, வட மாநிலங்களில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். அதிலும் குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் நடனம், வகைவகையான உணவு பரிமாறுதல், புத்தாடைகள் என விதவிதமாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் நவராத்திரி விழா நேற்று (22-09-25) தொடங்கியுள்ளது. இந்த விழா, அக்டோபர் 2ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், நவராத்திரி விழாவின் போது இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை விதிப்பதாக போபால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து போபால் துணைப் பிரிவு நீதிபதி திவ்யா படேல் தெரிவித்துள்ளதாவது, ‘நவராத்திரி செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கும். இதைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த நகரில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், குருகிராமில் விஸ்வ இந்து பரிஷத் நவராத்திரியின் போது அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளையும் மூடக் கோரி துணை ஆணையரிடம் விண்ணப்பித்துள்ளது. கோயில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள கடைகள், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், குடிமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், பல கடைகள் உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறுவதாகவும், இதனால் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.