சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால் மின்சார ரயில் சேவைகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம்  இடையே கூடுதல் பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்படுவது பற்றிய முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.  இது தொடர்பாக  தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரம் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே தலா 20 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertisment

bus-sch

அதன்படி தாம்பரத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு (காலை நேரத்தில் வழித்தடம் 1இன் படி (கிண்டி, அண்ணா சாலை, சேப்பாக்கம், தலைமைச் செயலகம் வழியாக): காலை 06:30 முதல் 08:43 வரை குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழித்தடம் 2இல் (கிண்டி, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை வழியாக) காலை 06:51, 07:19, 07:47, 08:08, 08:36 ஆகிய நேரங்களில் 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு (மாலை நேரத்தில் வழித்தடம் 1 இல் (தலைமைச் செயலகம், சேப்பாக்கம், அண்ணா சாலை, கிண்டி வழியாக) மாலை 05:00 முதல் 07:13 வரை 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழித்தடம் 2 இல்  (பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர், தி.நகர், கிண்டி வழியாக): மாலை 05:21, 05:49, 06: 17, 06:38, 07:06 ஆகிய நேரங்களில் 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertisment

அதே சமயம் நெரிசல் மிகுந்த நேரங்களில் (Peak Hours) பயணிகளின் வசதிக்காக 15 பெட்டிகள் கொண்ட 5 கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை நேரத்தில் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு விரைவு ரயில் பாதையில் (Fast Line)  5 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். மாலை நேரத்தில் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு 5 கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், மாம்பலம், கிண்டி, சென்னை எழும்பூர் மற்றும் கடற்கரை ஆகிய நிலையங்களில் மட்டுமே நிற்கும். சாதாரண ரயில்கள் 75 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில், இந்த அதிவேக ரயில்கள் 60 நிமிடங்களிலேயே இலக்கை சென்றடையும்.இந்த கூடுதல் சேவைகளை பயணிகள் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

train-sch

மேலும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) இணைந்து கூடுதல் சேவைகளை அறிவித்துள்ளன. அதன்படி தாம்பரம் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே தலா 20 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முறையான ரயில் டிக்கெட் அல்லது சீசன் பாஸ் வைத்திருப்பவர்கள் இந்தப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். அதோடு  நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையேயான புதிய எம்.ஆர்.டி.எஸ் (MRTS Phase-II) தடம் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்தப் புதிய பாதை 2026 மார்ச் 10 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். 

Advertisment

சோழன் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் நேரம் காலை 10:15 மணி என மாற்றப்பட்டுள்ளது இது வரும் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். நெல்லை எக்ஸ்பிரஸ் வர்ய்ம் மார்ச் 1ஆம் தேதி முதல் எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.பொதிகை எக்ஸ்பிரஸ்  மார்ச் 2ஆம் தேதி முதல் எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும். பயணிகளின் கூட்ட நெரிசலைக் கையாள மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றும் சென்னை மெட்ரோ (CMRL) கூடுதல் சேவைகளை இயக்க ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் திட்டமிட்ட முயற்சிகளால், மார்ச் 2ஆம் தேதிக்குள் 90% பயணிகளின் தேவையும், மார்ச் 10ஆம் தேதிக்குள் 100% தேவையும் பூர்த்தி செய்யப்படும்” எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.