கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் சீனிவாசன் என்பவர் கடந்த 30 வருடங்களாக சின்னசேலத்தில் உள்ள கடைவீதியில் நகைக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  ‘நாதன் தங்க மாளிகை’ என்ற பெயரில் கடை ஒன்றை நிறுவியுள்ளார்.

Advertisment

இந்நிலையில், 17-ம் தேதி மாலை 7 மணி அளவில் உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் செல்வதற்காக கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளார். பின்பு, மறுநாள் வழக்கம்போல் காலை 10 மணி அளவில் கடையைத் திறக்க வந்தபோது, கடையிலுள்ள ஷட்டர் கட்டிங் மெஷின் வைத்து அறுக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

Advertisment

சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்ததில், இரண்டு நபர்கள் கடையில் உள்ள ஷட்டரை மெஷின் வைத்து அறுத்தது பதிவாகியிருந்த நிலையில், நகை ஏதும் திருடுபோகவில்லை எனவும், இது வெறும் திருட்டு முயற்சிதான் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தத் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருடர்கள் நகைக் கடை ஷட்டரை மெஷின் வைத்து கட் செய்து திருட முயற்சித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும், சின்னசேலம் பகுதியில் இது போன்று தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தேறி வருவதாகவும், அதுமட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோவதாகவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisment

நகைக் கடையின் ஷட்டரை அறுத்து திருட முயற்சித்த சம்பவம், சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.