இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. இருப்பினும், தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை 06.02.2026 முதல் 12.02.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisment

 பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12.02.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.