Assam agent's rampage; wife gang in front of husband - shock in Srivaikundam Photograph: (thoothukudi)
ஸ்ரீவைகுண்டம் அருகே அசாம் மாநில இளம்பெண் அவரது கணவர் கண் முன்னேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லையில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஏஜென்ட்டான முகமது மஹ்புல் ஹுசைன் என்பவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதியரை ஸ்ரீவைகுண்டம் பக்கம் இருக்கிற அரசர்குளம் கிராமத்தில் உள்ள ஹாலோ பிளாக் தயாரிக்கும் ஒரு கம்பெனியில் கமிஷன் வாங்கிக்கொண்டு வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார். இதற்காக மாத மாதம் கமிஷன் பெற்றும் வந்துள்ளார்.
ஆனால் அந்தக் கம்பெனியில் போதிய அடிப்படை வசதி இல்லாததோடு ஏஜென்ட் கமிஷன் போக கிடைக்கும் கூலியும் போதாமல் அந்த தம்பதி தவித்து வந்துள்ளனர். இதனால் இரண்டு வாரங்களுக்கு பிறகு தாங்கள் வேலையில் இருந்து விலகுவதாக உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். வேறு வேலைக்காக கேரளா செல்லலாம் என்ற முடிவில் டிச.14 அன்று மதியம் அரசர்குளத்திலருந்து நெல்லைக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்து ஏஜென்ட் முகமது மஹ்புல் செல்போனில் தொடர்புகொண்டு அவர்களை, ''அங்கேயே வேலை செய்யுங்கள். நாம பேசிக்கலாம்'' என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். சிவந்திபட்டி சாலையில் அசாமைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களையும் கூட்டிக்கொண்டு முகமது மஹ்புல் ஹுசைன் வந்துள்ளார்.
தம்பதி பயணித்த ஆட்டோ வந்ததும் கல்குவாரியில் பணத்தை திருடி விட்டதாகச் சொல்லி ஆட்டோவில் இருந்து இருவரையும் கீழே இறக்கி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணின் கணவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கணவர் கண் முன்னேயே அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரத்தை அடுத்து பலமணி நேரத்திற்கு பின் இருவரையும் அந்தக் கும்பல் சாலை பகுதிக்குக் கொண்டு வந்து விட்டு விட்டு தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அன்று இரவு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தப்பி ஓடிய முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் அசாமை சேர்ந்த இரண்டு இளம் சிறார்களையும் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட அந்த மூன்று பேரும் அசாமை சேர்ந்தவர்கள் தான். தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருக்கிறது என தூத்துக்குடி எஸ்.பி.யான ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த இந்த கூட்டுப் பாலியல் கொடுமை சம்பவம் தூத்துக்குடி ஏரியாவை அனலாக தகிக்க வைத்திருக்கிறது.
Follow Us