டெல்லியில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இக்கொள்கையின்படி, மது விற்பனையில் இருந்து அரசு விலகி, 849 கடைகளை நடத்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும், சட்டவிரோத மது விற்பனையாளர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் ஆம் ஆத்மி அரசு கூறியது. இருப்பினும், இதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு (Delhi Excise Policy Case) எனப் பரவலாகத் தேசிய அளவில் பேசப்பட்டது. இப்புகாரை அடுத்து துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை (மோசடி) தொடர்பாக வழக்கைப் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் அப்போதைய டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், அப்போதைய பி.ஆர்.எஸ். கட்சித் தலைவராக இருந்த கவிதா மற்றும் அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இத்தகைய சூழலில் தான் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம், சி.பி.ஐ. தொடர்ந்த ஊழல் வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்ட 23 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் எந்தவிதமான குற்றத்திற்கான சதியோ, அதற்கான எண்ணமோ இல்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிபதி ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/27/cm-mks-6-2026-02-27-15-07-16.jpg)
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குறுகிய கால அரசியலுக்காக ஒன்றிய பாஜக அரசு விசாரணை அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. சற்று வெட்கப்படுங்கள். அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொண்டு, உண்மை வெளிவரச் செய்த எனது மதிப்பிற்குரிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவும் சிறப்பாகச் செய்தீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள்காட்டி அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் போராட்டத்தில் எப்போதும் எங்களுடன் நின்றதற்கு ஸ்டாலினுக்கு மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us