பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி (05.07.2024) தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 26 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனையடுத்து இந்த குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாகேந்திரன் உட்பட 17 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (06.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பாகக் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள், “சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியைக் கருத்தில் கொண்டு 26 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர். 

அதே சமயம் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கைது செய்யப்பட்டதற்கும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையான காலதாமத்தை கருத்தில் கொண்டு குண்டர் தடுப்பு சட்டத்தை த்து செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இந்த இந்த வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவில், “17 பேர் மீதான குண்டத்தீர்ப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 

ஏனென்றால் இதில் குண்டர் தடுப்பு சட்டம் போடும் போது காவல் ஆணையர் சரியான முறையில் தனது மனதைச் செலுத்தவில்லை. கடந்த ஓராண்டுக் காலமாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் எந்த விதமான முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே இந்த குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.