அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்காக நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என மேலும் இரண்டு நாடுகள் பரிந்துரைத்துள்ளன. அர்மேனியா - அஜர்பைஜான் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், அர்மேனிய பிரதமர் நிக்கோல் பாஷியன் மற்றும் அஜர்பைஜான் அதிபர் ஹில்ஹாம் அலியேவ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ட்ரம்ப் தலைமையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் அனைத்து போர்களையும் நிறுத்தி வர்த்தகம், பயணம் மற்றும் தூதரக உறவுகளை புதுப்பித்து ஒருவரது நிலபரப்பு இறையாண்மையை மற்றொருவர் மதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் பகுதியாக அர்மேனியா வழியாக அஜர்பைஜானின் நக்ஷிவான் பகுதியை இணைக்கும் புதிய போக்குவரத்து வழி உருவாக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்வு காண உதவிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இரு நாடுகளின் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அவர்கள், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என பரிந்துரைத்தனர். ஏற்கனவே பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளும் ட்ரம்பை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைத்துள்ளன.
முன்னதாக கடந்த மே மாதம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிரம்ப், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் அந்த விளைவுகள் என்னவாக இருந்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. நான் நான்கு அல்லது ஐந்து முறை வரை அதை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க மாட்டார்கள்.ஏனெனில், தாராளமயவாதிகளுக்கு தான் அந்த விருது வழங்கப்படும். ஆனால், மக்களுக்குத் தெரியும் அதுதான் எனக்கு முக்கியம்” என்று தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைய ட்ரம்ப் வகித்த பங்கு முக்கியமானது என பாகிஸ்தான் குறிப்பிட்டு டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. அதனை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கம்போடிய பிரதர்ம் ஹின்மோனட் ஆகியோர் டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என நோபல் கமிட்டிக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.