கடலூரில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள், பேரூராட்சிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்பவர்களிடமும், மூன்று மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களிடமும் தீபாவளிக்கு பணம் வசூல் செய்து மொத்தமாக வைத்துள்ளதாகவும், இதனை ஒட்டுமொத்தமாக சேர்ந்த பிறகு அனைவரும் பிரித்துக் கொள்வதற்காக உள்ளதாகவும் என்ற தகவல் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்துள்ளது.

Advertisment

அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான போலீசார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து திடீரென சோதனையில் ஈடுபட்டனர். முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், மேஜை டிராவரில் கட்டு கட்டாக ஒவ்வொரு பேரூராட்சியின் பெயர்களை எழுதி கவர் மற்றும் கட்டப்பட்டு, ரூ.5 லட்சம் 79 ஆயிரம் 960 இருந்துள்ளது. இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், கணக்கில் வராத பணம் என்பதும், இது தீபாவளிக்கு வசூல் செய்யப்பட்ட பணம் என்பது தெரியவந்த நிலையில், இதனை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Advertisment

அதே நேரத்தில், கணக்கில் வராத பணம் வைத்திருந்தது தொடர்பாக, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலக செயலாளர் உஷா, தகவல் மேலாண்மை வல்லுநர் வெங்கடேசன், பெண்ணாடம் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், கிள்ளை பேரூராட்சி பணி ஆய்வாளர் எழில்வாசன் (தற்போது உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்) ஆகிய நான்கு பேர்மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூரில் கட்டு கட்டாக தீபாவளி வசூல் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம், அரசு அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பேரூராட்சி ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, இதில் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற தீபாவளி நேரத்தில் வசூல் செய்து அனைவரும் பிரித்துக் கொள்வது வழக்கம்தான். இந்த வருடம் உதவி இயக்குநர் கூறியதன் பேரில் முன்கூட்டியே அலுவலக ஊழியர்கள், வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். இதனை பிடிக்காத ஊழியர்கள் சிலர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். திடீரென வந்து பணத்தை கைப்பற்றியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பணம் வசூல் செய்யக் கூறிய உயர் அதிகாரிகள் யாரும் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை; அவர்கள் கூறாமல் நாங்கள் யாரிடமும் இதுபோன்று பணம் வசூல் செய்ய முடியாது என்று கூறுகின்றனர்.

Advertisment