தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தன் சகோதரியை காதலித்து வந்த மாற்றுச் சமூக இளைஞரான கவினை கொலை செய்த சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த சம்பவத்தில் சுர்ஜித்தின் தந்தைக்கும் தொடர்பு இருக்கும், எனவே அவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவினின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சுர்ஜித்தின் தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனனை கஸ்டடியில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பலத்த பாதுகாப்புடன் கொலை நடந்த இடத்திற்கு சுர்ஜித்தை அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் கொலை எவ்வாறு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரித்தனர். சுர்ஜித் கொலை எவ்வாறு நிகழ்ந்தபட்டது என்பது தொடர்பாக நடித்துக் காட்டினார். இதனை வீடியோவாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்து கொண்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/13/a4614-2025-08-13-17-19-07.jpg)
இந்நிலையில் கவினை காதலித்து வந்த பெண் மற்றும் அவரது தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலைக்கு உதவி புரிந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஜெயபாலன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர் சிபிசிஐடி போலீசார்.