விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன. பட்டாசு ஆலையில் சுமார் 50 அறைகள் உள்ள நிலையில், இதுவரை 15 அறைகள் சேதமடைந்துள்ளன.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் பட்டாசு வெடி விபத்தில் ஒரு தொழிலாளர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பெரும்பாலான தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு வரவில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், தற்போது சாத்தூர் கீழதாயில்பட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.