Another attack at the same train station - Public shocked by series of atrocities Photograph: (THIRUTANI)
ரயில் பயணம் செய்த வடமாநில இளைஞரை இன்ஸ்டா மோகத்தில் சிறுவர்கள் சேர்ந்து பட்டாக் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதே திருத்தணி ரயில் நிலையத்தில் நடந்த மற்றொரு தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி சூரஜ் என்ற வடமாநில இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் திருத்தணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வடமாநில இளைஞர் சூரஜை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே திருத்தணி ரயில் நிலையத்தில் பட்டு புடவை வியாபாரி ஒருவரை இரண்டு இளைஞர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி விட்ட நிலையில் ரத்த காயத்துடன் மீட்கப்பட்ட அந்த நபரை ரயில்வே போலீசார் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் திருத்தணி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஜமால் பாய் என்பதும், பழைய பட்டு புடவைகளை வாங்கி விற்பவர் என்பதும் தெரிந்தது. நண்பர்களுடன் திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் ஜமால் பாய் மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த இரண்டு இளைஞர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த இளைஞர்கள் ஜமால் பாய் மீது தாக்குதல் நடத்தியது தெரிந்தது. தாக்குதலை ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Follow Us