சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணினி பொறியியல் துறையில் நான் முதல்வன் திட்டத்திற்கு வழங்கப்பட்ட 15 கணிப்பொறிகள் திருடப்பட்டுள்ளதாக அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கணிப்பொறியியல் துறைத் தலைவர் செல்வகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டய படிப்பு படித்து வரும் நெய்வேலி ஊமங்கலம் அரசகுழி பகுதியைச் சேர்ந்த லிவின்அஜய்(18) என்பவர் கணிப்பொறிகளை திருடியது தெரியவந்தது. இவர் திருடிய கணிப்பொறிகளை ஆன்லைன் மற்றும் பல பேரை நேரில் அழைத்து விற்பனை செய்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த பலர் இவர் விற்பனை செய்த கணினியை திருப்பி அளித்துள்ளனர்.
இதனை அறிந்த அவரை காவல்துறையினர் கைது செய்து திருடப்பட்ட கணினிகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை(25.6.2025) இரவு சிறைக்கு அனுப்பினர். கைப்பற்றப்பட்ட கணினிகளின் மதிப்பு ரூ 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.