Andhra Pradesh government announced Financial assistance for having more children
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், முதல்வர் சந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆந்திர மாநிலத்தில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகவும், முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஆந்திர மாநிலத்தின் எதிர்கால மக்கள் தொகை குறித்த கவலையை அம்மாநிலம் முழுவதும் எழும்பியுள்ளது.
அதாவது, ஆந்திராவின் கருவுறுதல் விகிதம் தற்போது 1.5 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்துக்கொள்ளத் தேவையான பிறப்பு விகிதம் 2.1 ஐ விட இது மிகக் குறைவு. இதனால் 2047ல் ஆந்திரா மாநிலம், வயதான மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில், ஆந்திராவில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அம்மாநில முதல்வர் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆந்திராவில் இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி ஒரு முறை வழங்கப்படும். மேலும், மூன்றாவது குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு செலவிற்காக மாதம் ரூ.1,000 வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அடுத்ததாக, அந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்படும். அரசு ஊழியர்களாக உள்ள பெண்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அதே நேரத்தில், ஆண்களுக்கு 2 மாத பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும். கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் முன்னுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us