வயது மூப்பு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) இன்று (25-02-26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி எம்.பி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர் ரஞ்சித், கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நல்லகண்ணுவின் மறைவு மிகப்பெரிய இழப்பு. அதே வேளையில் இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல, வருங்கால தலைமுறையினருக்கு அவர் வாழ்ந்த காலம் மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டு. இன்றைய அரசியலில் பதவிகள், ஆடம்பரம், பணம் மத்தியில் எப்படி ஒரு அரசியல் தலைவர் இருக்க வேண்டுமென்று மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்தவர். எளிமையான வாழ்க்கை, போராட்ட குணம், விடுதலைக்காக பல முறை சிறைக்கு சென்றவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூக நீதி காக்க அவர் வாழ்க்கையை தியாகம் செய்தவர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல முறை சிறைக்கு சென்று நீதிமன்றம் மூலமாகக் கூட சுற்றுச்சூழலை பாதுகாத்தவர். காமராஜர், கக்கன் வரிசையில் ஐயா நல்லகண்ணு” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/25/nallaanbu-2026-02-25-23-02-30.jpg)