தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (01-26) மாநாடு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இந்த மாநாட்டில் பா.ம.க தலைவர் அன்புமணி பேசியதாவது, “இந்த கூட்டம் வெற்றி பெறக்கூடாது என்று ஸ்டாலினின் திமுக அரசு எத்தனை சூழ்ச்சி செய்தாலும் நிச்சயமாக இந்த கூட்டம் வெற்றி பெறும், வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம். ஆனால் கடந்த ஐந்த ஆண்டு காலத்தில் இந்த திமுக அரசு சமூக நீதியை 100அடி ஆழமான பள்ளத்தை தோண்டி முழுமையாக புதைத்துவிட்டது. அதற்கு தமிழக மக்கள் நிச்சயமாக முதலமைச்சர் ஸ்டாலினினை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். மாறாக கடந்த ஆறாண்டு காலத்தில் இந்திய அளவில் சமூக நீதியில் மூன்று பெரிய சாதனைகளை செய்திருக்கின்றார் நம்முடைய பிரதமர்  நரேந்திர மோடி. ஒன்று, இதுவரை சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக இந்திய அளவில் சாதிவாரி  கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவிப்பை வெளியிட்டு இந்த ஆண்டிலிருந்து இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. கடைசியாக இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது வெள்ளையர்கள் காலத்தில் 1931ல்  95 ஆண்டு காலத்திற்கு முன்பு நடைபெற்றது. அந்த பழமையான தரவுகளை வைத்துதான் இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. அதை மாற்றி அமைத்து நவீனமான ஒரு இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்த பிரதமர்  நரேந்திர மோடிக்கு எங்களுடைய பணிவான நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

Advertisment

இரண்டாவது சாதனை, தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி. இது 25  ஆண்டு கால கோரிக்கை அது அதை நிறைவேற்றி இருக்கின்றார். மூன்றாவது சாதனை, ரோகிணி ஆணையத்தை உருவாக்கி இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓபிசி மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வேற்றுமைகளை கண்டறிந்து அதை அகற்றுகின்ற ஒரு முயற்சியில்  ஈடுபட்டிருக்கின்றார் நம்முடைய பிரதமர். ரோகிணி ஆணையத்தை அமைத்த பிறகு அதில் ஒரு மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பில், இந்திய அளவில் ஓபிசி 27 விழுக்காட்டு இட  ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 2,633 சமூகங்கள் இருக்கிறது. அதில் 10 சமூகங்கள் 25 விழுக்காடு இடங்களை தட்டி செல்கிறார்கள், 38 சமூகங்கள் இன்னொரு 25 விழுக்காடு இடங்களை தட்டி செல்கிறார்கள், 102 சமூகங்கள் இன்னொரு 25 விழுக்காடு இட  ஒதுக்கீட்டை தட்டி செல்கிறார்கள்.  இன்னொரு 506 சமூகங்கள், 22.5 விழுக்காடு இட ஒதுக்கீடை தட்டி செல்கிறார்கள். ஆக 2,633 சமூகங்களில் 1,977 சமூகங்கள் வெறும் 2.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தான் பெறுகிறார்கள் என்ற உண்மையை கண்டுபிடித்தவர் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி.

அதை கண்டுபிடித்து அதை சரி செய்கின்ற ஒரு முயற்சியில் இருக்கின்றார்கள். உண்மையிலேயே சமூக நீதி என்றால் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி தான். ஆனால் சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு என்று வீர முழக்கம் சொல்லுகின்ற திமுக குறிப்பாக ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கும் சமூக நீதிக்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தரவுகளை வெளியிட்டு, அதற்கு ஏற்ப சமூக திட்டங்களை வழங்கி இட  ஒதுக்கீடை உயர்த்தியது பா.ஜ.க ஆளுகின்ற மாநிலம் பீகார். சுதந்திர இந்தியாவிலே முதன் முதலாக நடந்தது பீகார். ஆனால் சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாட்டில் அது நடைபெற்றிருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஸ்டாலினிடம், கணக்கெடுப்பு நடத்துங்கள், கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று எத்தனை முறை நாங்கள் கேட்டோம். அந்த கணக்குதான் பீகாரில் நடத்தி ரூ.6000 ரூபாய்க்கு குறைவான வருமானம் பெறும் 97 லட்சம் குடும்பங்களுக்கு அந்த அரசு இரண்டு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து அவர்களுடைய குடும்ப வளர்ச்சிக்காக செய்திருக்கிறது. இதுதான் உண்மையான சமூக நீதி. அதே போல் 67 லட்சம் குடும்பங்களுக்கு சொந்த வீடு என்று கணக்கெடுப்பில் தெரிந்த பின் அந்த குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது பீகார் மாநில அரசு. இதான் உண்மையான சமூக நீதி. ஆனால், நான் கணக்கெடுக்க மாட்டேன், எந்த பிரச்சனையும் தெரிந்துகொள்ள விருப்பம் இல்லை என்று சொல்லுகின்ற ஒரு முதலமைச்சரை பார்த்திருக்கிறீர்களா? அதைவிட மோசம், சட்டமன்றத்திற்குள் பொய் சொல்லுகின்ற ஒரு முதலமைச்சரை பார்த்திருக்கிறீர்களா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சட்டமன்றத்திற்குள் எத்தனையோ முறை பொய் சொல்கிறார். கணக்கெடுப்பு நடத்துவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார்.

Advertisment

பிறகு பீகார், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் எப்படி எடுத்தார்கள்? எந்த சட்டத்தின் கீழ் எடுத்தார்கள்? இந்தியன் ஸ்டாட்டிஸ்டிகல் ஆக்ட் 2008 படி தான் அத்தனை மாநிலங்களும் எடுத்தார்கள். அந்த சட்டத்தின் கீழ் தான் மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது, மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஏன்? பஞ்சாயத் தலைவர்களும் அதிகாரம் இருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி, 2 கோடி குடும்பம். அந்த  இரண்டு கோடி குடும்பம் எப்படி இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்கு கூட உங்களுக்கு மனசு இல்லையா? இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 69% இட ஒதுக்கீடு எமக்கு கிடைத்திருக்கிறது.  அந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாத்தவர்  ஒரே ஒரு நபர் தான், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அவர் மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு 69% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பார்கள். 1993ல் தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசை வலியுறுத்தி அரசியல் சாசன சட்ட திருத்தத்தை கொண்டு வந்து ஒன்பதாவது அட்டவணையை பாதுகாத்தவர் ஜெயலலிதா தான். இல்லையென்றால் அது நமக்கு இன்று கிடைத்திருக்காது. நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் மீண்டும் பாராட்டுகின்றேன். ஏனென்றால் அவர் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றவர். குஜராத்தில், சௌராஷ்டிரா என்ற பகுதி இருக்கிறது. அது மிகவும் வறட்சியான பகுதி, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத பகுதி. அந்த பகுதிக்கு ஒரு திட்டத்தை வகுத்து 12,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சௌராஷ்டிரா நர்மதா நீர் திட்டம் என்று அறிவித்து அங்கு நீரை அந்த பகுதிக்கு கொண்டு சென்று இன்றைக்கு 11 மாவட்டங்கள் வளம் செழிக்க மாவட்டங்களாக மாற்றிய அமைத்திருக்கின்றார் நம்முடைய நரேந்திர மோடி. தமிழக மக்களே ஆட்சி மாற்றத்தை கொண்டு வாருங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு நம்முடைய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் கொண்டு வர வேண்டும், வெற்றி பெற வேண்டும். எங்கள் கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள்” என்று கூறினார்.