Advertisment

வன்னியர் சங்க மகளிர் மாநாடு: அன்புமணியின் படம் புறக்கணிப்பு!

104

பா.ம.க. கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியின் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், அன்புமணி “100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

Advertisment

இத்தகைய சூழலில், பா.ம.க.வின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதே சமயம், ராமதாஸுக்கு எதிராக ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வடிவேல் ராவணன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அன்புமணி பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கு எதிராக ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9ஆம் தேதியான நேற்று அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொள்ளாத சூழலிலும், அவருக்கென தனியாக ஒரு நாற்காலி காலியாக விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று மாலை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட நுழைவு வாயிலில் அன்புமணியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நேற்று அன்புமணி தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றதோடு, அவருக்கென தனி இருக்கையும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் அன்புமணியின் படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

anbumani pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe