An elderly man was hit by man delhi
தனிப்பட்ட பகை காரணமாக பட்டப்பகலில் ஒரு முதியவரை சாலையில் வைத்து ஒரு இளைஞர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் அலி காவ்ன் பகுதியில் கடந்த 24ஆம் தேதி ரகுராஜ் என்ற முதியவர் தனது காரில் தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர், ரகுராஜை தடுத்து நிறுத்தி, அவரின் கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் ஒரு நபர், ரகுராஜை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து குச்சியால் இரக்கமின்றி அடிக்கத் தொடங்கினார். ரகுராஜ் வலியால் அழுவதை கண்ட சாலையில் சென்றவர்கள், தலையிட்டு தாக்குதலை தடுக்க முயன்றனர். ஆனாலும் அந்த நபர், ரகுராஜை கொடூரமாகத் தாக்கி மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த தாக்குதலில், ரகுராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவரது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவரை தீவிரமாகத் தேடினர். அதன்படி ரகுராஜை கொடூரமாகத் தாக்கியது மோஹித் என்ற நபர் என அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர். அதில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோஹித், அலி காவ்ன் பகுதியில் ஒரு நிலத்தை வாங்கி அதில் கட்டுமானம் ஒன்றை கட்டத் தொடங்கியுள்ளார். ஒரு மாதத்திற்குள், டெல்லி மேம்பாட்டு ஆணையம் அந்த கட்டமைப்பு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் என்று கூறி அந்த கட்டுமானத்தை இடித்தது. இதில் மோஹித் மன உளைச்சல் அடைந்துள்ளார்.
டெல்லி மேம்பாட்டு ஆணையத்திடம் ரகுராஜ் புகார் அளித்ததன் பேரில் தான், கட்டுமானம் இடிக்கப்பட்டது என மோஹித் சந்தேகமடைந்துள்ளார். தனது இழப்புக்கு ரகுராஜ் தான் காரணம் என்று நம்பி அவரை பழிவாங்க மோஹித் திட்டமிட்டு அவரை தாக்கியுள்ளார் என்று தெரியவந்தது. இதனையடுத்து, டெல்லி காவல்துறையினர், மோஹித் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவரையும் அவரது கூட்டாளியையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us