திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மத்தூர்கொல்லை பகுதியில், திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கலீல் என்பவர், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில், மாடு, ஆடு, கோழிகளைப் பண்ணை அமைத்து வளர்த்து வருகிறார். இந்தப் பண்ணையில், திருப்பத்தூரைச் சேர்ந்த அஷ்கர் பாஷா என்பவர், மனைவியைப் பிரிந்து, கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நிலையில், அதே பண்ணையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை அஷ்கர் பணிக்கு அழைத்து வந்துள்ளார்.

Advertisment

அஷ்கர் பாஷா, தினமும் தனது தாய் மற்றும் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 2 நாட்களாக அஷ்கர் பாஷா, அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாத நிலையில், நேற்று அஷ்கர் பாஷா பணியாற்றும் நிலத்திற்கு வந்த அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது, அங்கு அஷ்கர் பாஷாவின் செல்போன் மற்றும் இரு சக்கர வாகனமும், அவருடன் பணியாற்றி வந்த 2 வடமாநில இளைஞர்களும் காணாமல் போனதை அறிந்த அவரது குடும்பத்தினர், இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், அதனைத் தொடர்ந்து இன்று, அஷ்கர் பாஷா பணியாற்றி வந்த அதே நிலத்தில் உள்ள விவசாய நிலத்தில், கிணற்றில் சடலமாகக் கிடந்துள்ளார். உடனடியாக, இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், கிணற்றில் உடல் முகம் பகுதியில் பலத்த காயங்களுடன் அஷ்கர் பாஷாவின் உடலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், அஷ்கர் பாஷா முகத்தில் காயங்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். அப்போது, அஷ்கர் பாஷாவை வடமாநில இளைஞர்கள் அடித்துக் கொலை செய்து, கிணற்றில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, அஷ்கர் பாஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அஷ்கர் பாஷாவை அடித்துக் கொலை செய்து, அவரது உடலை வடமாநில இளைஞர்கள் கிணற்றில் எதற்காக வீசிச் சென்றனர் என, பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய வடமாநில இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisment

விவசாய நிலத்தில் பண்ணைப் பணியாளர்களாக ஒன்றாகப் பணியாற்றி வந்த நபரை வடமாநில இளைஞர்கள் அடித்துக் கொலை செய்து, கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.