வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி காரைக்காலில் இன்று (14-02-26) பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அதன் பின் மக்களிடம் உரையாற்றிய அவர், “உலகின் தொன்மையான மொழியான தமிழில் உங்களுடன் உரையாற்ற முடியவில்லை என்பதால் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இங்கே இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதில், முதல் காரணம் இதுவரை பிரதமர் மோடி தலைமையிலும் ரங்கசாமி தலைமையிலும் நடந்த இந்த ஆட்சியில் இதுவரை இங்கு என்னென்ன நடந்துள்ளது என்பதைப் பற்றிப் பேச வந்துள்ளேன். இரண்டாவதாக, இந்தியா கூட்டணியின் தீய நோக்கத்தினை உங்களிடம் எடுத்துச் சொல்ல வந்துள்ளேன்.
பாண்டிச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்ததில், மூன்று முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் முதலாவதாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊழல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாவதாக, பாண்டிச்சேரி அரசாங்கத்தை சுயமாக இயங்கும் அரசாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கியுள்ளது. மூன்றாவதாக இங்கே அரசியல் நிலைத்தன்மையை உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது, 2019ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். இந்த தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக நாம் அந்த பயங்கரவாதிகளை வீடு புகுந்து தாக்கினோம். ஆபரேஷன் சிந்தூர் மூலமாக, அவர்கள் மீது நாம் வான் வழி தாக்குதல் நடத்தினோம்.
நம் பாண்டிச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் ரங்கசாமி மீதும் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் 44% வாக்குகளை அளித்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை நமது கூட்டணி 60% வாக்குகளைப் பெறும். நமது முதலமைச்சர் நமக்கான ஒரு சிறப்பான ஆட்சியைத் தந்துகொண்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்ட ஒழுங்குகளைச் சரி செய்திருக்கிறது. மேலும், நிர்வாகத்தின் அனைத்து அமைப்புகளையும் சீர்செய்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக மலேசியாவில் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை உருவாக்கப் பிரதமர் உறுதியளித்துள்ளார். மேலும், திருவள்ளுவரின் பெயரில் அங்கு வாழும் தமிழர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதுச்சேரி மீனவர்களின் மீன் உள்ளிட்ட பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். பாண்டிச்சேரியை தொழில்நுட்பத்தின் மைய களமாக மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இன்னும், சில நாட்களில் புதுச்சேரிக்கு எனப் பல திட்டங்களைப் பிரதமர் அறிவிக்க உள்ளார். இனிவரும் காலங்களில் வளர்ச்சி புதுச்சேரி என்ற நிலைக்கு நம் மண்ணை கொண்டு செல்ல வேண்டும். அதற்காக நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/14/amist-2026-02-14-17-02-19.jpg)