Advertisment

“காங்கிரஸ் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தது” - பதவி நீக்க மசோதா குறித்து அமித் ஷா!

amitsh

Union minister Amit shah in Lok sabha

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்தும் பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு அனுமதி தராமல் மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்ற அவையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

Advertisment

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று (21-08-25) முடிவடைய உள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் போன்றவர்கள் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலோ அல்லது காவலில் இருந்தாலோ அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (20-08-25) நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மசோதாவில், 5 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை விதிக்கும் வகையிலான எந்த ஒரு குற்றச்சாட்டின் கீழும் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால் 31வது நாளில் அவர்கள் தனது ராஜினாமாவை சமர்பிக்க வேண்டும். ஒருவேளை ராஜினாமாவை சமர்பிக்கவில்லை என்றால் அவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது.

Advertisment

இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் எனவும் இந்த புதிய மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமித் ஷா தாக்கல் செய்த மசோதாவின் நகலை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்து அமித் ஷா முகத்திற்கு முன்னாள் தூக்கி எறிந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அமித் ஷா மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதா மற்றும், யூனியன் பிரதேச அரசு திருத்தம் மசோதா ஆகிய 2 மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

இந்த மூன்று மசோதாக்களும் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கும், மத்திய அமைச்சர்கள் மற்றும் மையத்தில் உள்ள பிரதமருக்கும் பொருந்தும் வகையில் முற்றிலும் புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், இந்த மசோதாவை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள், அமைச்சர்கள் மீது பொய் புகாரைப் பதிவு செய்து சிறையில் அடைக்க ஒன்றிய பா.ஜ.க அரசு முயல்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தன்னை ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிக்க வைத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அவையில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் எனக்கு எதிராக தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் என்னை முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிக்க வைத்து கைது செய்த போது நான் ராஜினாமா செய்யவில்லை. மாறாக கைது செய்யப்படுவதற்கு முன்பே நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்பதை காங்கிரஸுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகும், நீதிமன்றம் என்னை முழுமையாக விடுவிக்கும் வரை நான் எந்த அரசியலமைப்பு பதவியையும் வகிக்கவில்லை. என் மீதான போலி வழக்கு, அரசியல் பழிவாங்கலால் தூண்டப்பட்டது என்ற கருத்துடன் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. பா.ஜ.கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எப்போதும் தார்மீக விழுமியங்களுக்காக நிற்கின்றன.

அத்வானியும், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், இந்திரா காந்தி தொடங்கிய நெறிமுறையற்ற பாரம்பரியத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வந்ததையும், ராகுல் காந்தியையும் எதிர்த்த லாலு பிரசாத் யாதவ், இன்று பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த இரட்டை நிலைப்பாட்டை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்கிறார்கள். இந்த மசோதா விரிவான விவாதத்திற்கு நாடாளுமன்ற கூட்டு நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பப்படும் என்று ஏற்கெனவே தெளிவுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைமையின் கீழான முழு இந்தியா கூட்டணியும், ஊழலைக் காப்பாற்ற வெட்கமின்றி அதை எதிர்க்க ஒன்றுபட்டுள்ளது. இன்று மக்கள் முன்பு எதிர்க்கட்சிகள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடி தன்னை சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். மறுபுறம், காங்கிரஸ் தலைமையிலான முழு எதிர்க்கட்சியும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும், அரசாங்கங்களை சிறையில் இருந்து நடத்தவும் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளவும் அதை எதிர்த்துள்ளன” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

monsoon session PARLIAMENT SESSION lok sabha Amit shah bill
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe