அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த 18ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கூட்டத்தினர் மத்தியில் ஆம்புலன்ஸ் ஒன்று நுழைய முயன்றது. 

Advertisment

அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி, “ஆம்புலன்ஸில் ஆள் இருக்காங்களா, இல்லையா? ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்குது. வண்டியை நிறுத்திப் பாருங்கள். அடுத்த முறை வெறும் ஆம்புலன்ஸ் வண்டி வந்தால், அதனை யார் ஓட்டிக்கொண்டு வருகிறார்களோ, அவரே பேஷண்ட்டாக மாறி ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்படும் விடும்” எனப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும், எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணச்சநல்லூரில் எடப்பாடி பழனிசாமி நேற்று (24.08.2025) பரப்புரை மேற்கொண்டார். அதன்படி மணச்சநல்லூரில் பரப்புரையை முடித்து கொண்டு துறையூருக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து கொண்டிருந்தார். 

அச்சமயத்தில் துறையூரில் பாலக்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் திரளாக கூடியிருந்தனர். அப்போது ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக 108 ஆம்புலன்ஸ் அவ்வழியாக சென்றது. அதே சமயம் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்யும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவது வாடிக்கையாகவும், தொடர்கதையாகவும் உள்ளது என அதிமுக தொண்டர்கள் கூறி 108 ஆம்புலன்ஸை சுற்றி சூழ்ந்துகொண்டு ஓட்டுநரைத் தாக்கியும், ஆம்புலன்ஸை கைகளால் தட்டியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் நிலைகுலைந்து போன ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செய்வதறியாது திகைத்து நின்றார். 

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக நகரச் செயலாளர் பாலு உள்பட அதிமுகவினர் 14 பேர் மீது 6 பிரிவுகளில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் 108 அவசர ஊர்தியின் (ஆம்புலன்ஸ்) ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊழியர்களின் உயிருக்கும், உடைமைக்கும் போதிய பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருளாண்டி என்பவர் சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.